கோவையில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணி தாமதம்…
கோவை மாவட்டத்தில் மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு, சூலூர், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது.
இதில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தற்போது 446 ஓட்டு சாவடிகள், 8 துணை ஓட்டு சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளுக்கு மேப் உள்ளிட்ட தகவல் விவரங்களுடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஓட்டு சாவடிகளில் குடிநீர், கழிவறை, சாய்வு தளம், நிழற்கூரை உள்ளிட்ட வசதிகளை செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவு வழங்கியது. ஆனால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டு சாவடிகள் தயார் செய்யப்படவில்லை. ஒட்டு சாவடிகளில் மேற்கொள்ளப்பட் பணிகள் குறித்த விவரங்களும் தேர்தல் பிரிவில் ஒப்படைக்கப்படவில்லை.
சில ஓட்டு சாவடிகள் வன எல்லை பகுதிகளில் இருக்கிறது இங்கே போதுமான மின் விளக்கு வசதி செய்யப்படவில்லை. ஒட்டு பதிவிற்கு முந்தைய நாள் ஓட்டு மெசின்களை வைக்கும் இடம், அலுவலர்கள் தங்கும் இடம் போன்றவை முறையாக தயார் செய்யப்படாமல் இருப்பதாக தெரிகிறது.
மேலும் ஓட்டு சாவடி அமைவிடம், வரிசை எண், பாகம் எண் தொடர்பான விவரங்களும் இன்னும் தயார் செய்யப்படவில்லை. அடுத்த மாதம் தான் தேர்தல் நடக்கவுள்ளது. பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. வரும் ஏப்ரல் 6ம் தேதிக்கு பின்னர் அனைத்து வசதிகளும் செய்யப்படும். ஒட்டு சாவடிகள் முழு அளவில் தயார் செய்யப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
