ஓட்டு போட மாட்டோம் என கலெக்டர் ஆபீஸ் முற்றுகை
கோவையில் கணபதி மாநகரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 35 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது. அங்கு இருந்த நிலத்தை கையகப்படுத்தி அங்கு உயர், மத்திய மற்றும் குறைந்த வருவாய் பிரிவுகளில் 1,005 வீடுகளை கட்டியது.
அதற்கு உரிய தொகை உரிமையாளர்களிடம் பெறப்பட்டது. ஆனால் அதற்கான பத்திரங்களையும், தடையில்லா சான்றையும் இதுவரை வழங்கவில்லை. இதனால் கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழு தொடங்கி பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் கூட்டுக்குழுவினர் இன்று காலை தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்பக்க உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த குழுவின் தலைவர் ஜெயச்சந்திரன் கூறும்போது, கோர்ட்டு உத்தரவிட்டும் எங்களுக்கு வீட்டுக்கான பத்திரத்தை வழங்கவில்லை. 33 ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. நாங்கள் கலெக்டரிடம் எங்களது வாக்காளர் அட்டையை கொடுத்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தோம்.
எங்களை கலெக்டர் அழைத்து பேசினார் தேர்தல் முடிந்ததும் வீட்டுவசதி வாரியத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். வருகிற 18-ந் தேதி பொதுக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்க உள்ளோம் என்றார்.
