கோவையில் தேர்தலுக்காக பதுக்கி வைத்த 5102 மது பாட்டில்கள் பறிமுதல்…!
கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து வகையான எப் எல் 2 மற்றும் எப் எல் 3 மதுபான பார்கள் மூடப்பட்டது. வரும் 23ஆம் தேதி வரை மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது.
இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கரியாம்பாளையம் பகுதியில் உள்ள காளிமுத்து(48) என்பவரின் தோட்டத்தில் மது பாட்டிலில் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமலாக பிரிவு போலீசார் அங்கே சென்று சோதனை செய்தபோது 5102 மது பாட்டில்கள் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து காளிமுத்து மற்றும் அவரின் கூட்டாளிகளான குமார் 42 , வீரமணி 35 ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 3897 பிராந்தி பாட்டில் 1019 ரம் 156 பீர் பாட்டில் மற்றும் 30 ஓட்கா பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுபான கடையில் இருப்பதை காட்டிலும் இவர்களிடம் அதிக அளவு மதுபானங்கள் எப்படி வந்தது எந்த கடையில் இருந்து மதுபானங்கள் வாங்கினார்கள் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மூன்று நாட்கள் மதுபான கடை விடுமுறை விட்டதை தொடர்ந்து மொத்தமாக தோட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்திருக்கும் பின்னணியில் அரசியல் கட்சியினர் இருக்கலாம் என தேர்தல் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இதன் பின்னணி குறித்து விசாரணை நடக்கிறது.
