கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்துங்க… அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம்…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் கூறியதாவது:
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஓட்டு போடச் சொல்லி மக்களை மிரட்டி வருகிறார்கள். அழகப்ப செட்டியார் வீதியில் திமுகவினர் ஓட்டுக்காக கொண்டு வந்த 30 கோடி ரூபாய் பணம் பறக்கும் படை வசம் பிடிபட்டது. ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் ஓட்டுக்கு பணம் தரும் நபர்கள் தொடர்பாக புகார் தெரிவித்தால் தேர்தல் பிரிவினர் கண்டு கொள்வதில்லை. மக்களை ஓட்டு போடச் சொல்லி மிரட்டும் செயல் அதிகமாகிவிட்டது. எனவே தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும். இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தக்கூடாது. தேர்தல் ஆணையம் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திய பின்னர் தேர்தல் நடத்த வேண்டும்.
தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள லாட்ககளில் வெளியூர் நபர்கள் தங்கி இருக்கிறார்கள் . அவர்கள் இன்னும் கோவையிலிருந்து வெளியேறவில்லை. இது தொடர்பாக புகார் தெரிவித்தும் தேர்தல் பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கே எல்லாம் செந்தில் பாலாஜி ஆட்கள் தான் இருக்கிறார்கள். ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து எங்களிடம் நீங்கள் பணம் வாங்கி விட்டீர்கள் நீங்கள் வேறு கட்சிக்கு ஓட்டு போட்டால் எங்களுக்கு தெரிந்து விடும் என மிரட்டுகிறார்கள். இதனால் வாக்காளர்கள் மிகுந்த பயத்தில் காணப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் தேர்தல் எப்படி நடத்த முடியும். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்றார்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவினரை வெளியேற்றம் முயன்றனர் .ஆனால் அம்மன் அர்ஜுனன் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். கலெக்டரிடம் முறையிட்டு எனக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே இங்கு இருந்து செல்வேன் என அடம்பிடித்தார் இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
