ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று முதல் வேலை செய்து வருகின்றனர். “தாயுமானவர் திட்டத்தினால் பாதிப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்ய வலியுறத்தி வரும் 10ம் தேதி கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
110வது விதியின் கீழ் ரேஷன் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் தர வேண்டும். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ஆதார் சரி பார்ப்பு, கேஒய்சி, பொங்கல் பரிசு என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்தனர். மாநில அளவில் தாயுமானவர் திட்டத்தில் சிக்கல் இருக்கிறது. இந்த திட்டத்திற்கு மட்டும் புளூ டூத் கருவியை நீக்கி நேரடியாக ஸ்கேன் முறையில் உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.
பெண் பணியாளர்கள் கர்ப்பிணிகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மாடி ஏறி பொருட்களை தூக்கிச்செல்ல வேண்டியிருக்கிறது. கருவியில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடுகிறது. பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சார்ஜ் போட சொல்கிறார்கள். அப்படி நாங்கள் செய்ய முடியுமா? வயதானவர்களுக்கு கைரேகை விழுவதில்லை. சில ஏரியாக்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது.
பிராக்சி என்ற நேரடி வினியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும். 3 மாத பொருட்களை ஒரே தவணையில் வழங்கலாம். அரிசி போன்றவற்றை பாக்கெட் முறையில் தர வேண்டும். தாயுமானவர் திட்டத்திற்கான 200 ரூபாய் ஊக்க தொகை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
