கே.என் நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!
கோவை சிங்காநல்லூரில் முன்னாள் அமைச்சரின் சகோதரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் ஆகியோர் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், திருச்சியில் உள்ள முக்கிய அலுவலகங்கள் மற்றும் கோவை என முதற்கட்டமாக 10 இடங்களில் தொடங்கிய இந்த சோதனை மாநிலம் முழுவதும் 25 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விரிவடைந்தது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக கோவை திருச்சி ரோடு, சிங்காநல்லூர் அருகே உள்ள கே.என்.ரவிச்சந்திரனின் சொந்தமான பிரபல டி.வி.எச் அடுக்குமாடி குடியிருப்பில் அரவது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை நடத்தி நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட போலீசார் குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.
அலுவலகத்தில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. இந்த திடீர் அதிரடி சோதனை காரணமாக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கோவை ராமநாதபுரம் சிவராம் நகரில் உள்ள ஓய்வு பெற்ற மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சசிப்பிரியா வீட்டிற்கு சோதனை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்றனர். அப்போது அவர் வெளிநாட்டில் வசித்து வருவதாக அவரது வீட்டில் வேலை செய்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் வீட்டை சீல் வைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
