கோவையில் கூலி தொழிலாளி அடித்து கொலை…? 2 பேரிடம் விசாரணை
கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). கூலி தொழிலாளி. இவர் மனைவி பாரதி கண்ணம்மா (33). சுரேஷிற்கு நீண்ட நாட்களாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், கடந்த 12ம் தேதி பாரதி கண்ணம்மா உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக கேரளா சென்றார். மறுநாள் மாலை சுரேஷின் நண்பர் ராஜேஷ் என்பவர் சுரேஷை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது, சுரேஷ் மூக்கு மற்றும் வாயில் ரத்தக் கசிவுடன் சடலமாக கிடந்தார் .
உடனே அவர், பாரதி கண்ணம்மாவிற்கு போனில் அழைத்து தகவல் தெரிவித்தார். அவர் வீட்டிற்கு வந்து சுரேஷின் உடலை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷின் உடலை சோதனை செய்தனர். அப்போது அவரது தலையில் பலத்த காயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
