கோவையில் வீடுகளுக்கு பாம்பு வருவதாக தீயணைப்பு துறைக்கு1368 புகார்…!
கோவை மாவட்டத்தில் தீயணைப்புத்துறையில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பீளமேடு, கணபதி, கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 14 பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வெயில் காலமாக இருப்பதால் தீ விபத்துகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் தினமும் வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 3 மாதத்தில் பாம்பு தொந்தரவு தொடர்பாக 1368 அழைப்புகள் பெறப்பட்டது. வெயில் காரணமாக பொந்துகளில் இருந்து வெளியே வருவதாகவும் குடியிருப்புகளில் நுழைந்து விடுவதாலும் தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில் ,”கோவை மாவட்டத்திற்கு கடந்த 3 மாதத்தில் தீ விபத்துகள் தொடர்பாகவும், மீட்புப் பணிகள் தொடர்பாகவும் 1748 அழைப்புகள் வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 644 அழைப்புகள் வந்துள்ளது. அதில் 507 அழைப்புகள் பாம்புகளை மீட்க வந்துள்ளது. பிப்ரவரி மாதம் 496 அழைப்புகளில் 411 அழைப்பும், மார்ச் மாதம் 608 அழைப்பில் 450 அழைப்புகளும் பாம்புகளை மீட்க வந்துள்ளது.
அதிக வெயில் காரணமாகவும், உணவை தேடி பாம்புகள் இடப்பெயர்ச்சி ஆகிறது. இதனால், வீடுகளில் பாம்பு நுழைந்து விடுகிறது. வீடுகளை சுற்றியும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். பாம்பு வருவது தெரியவந்தால் வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடரை போட்டு வைத்தால் பாம்பு வருவதை தவிர்க முடியும். பாம்பு, தேனீ பிடிக்க தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாம்புகள் காயம் இல்லாமல் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
