கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய 18 கரூர் வேட்பாளர்கள் வேட்பு மனு ஏற்பு…!
கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுகவின் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார்.
செந்தில் பாலாஜி பெயரில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரின் வேட்பு மனு இன்று சரியாக பூர்த்தி செய்யவில்லை என நிராகரிக்கப்பட்டது.
இதே போல் செந்தில் என துவங்கும் பெயரில் இருந்த இரண்டு வேட்பு மனுக்கள் பாலாஜி என்ற பெயரில் இருந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
தெற்கு தொகுதியில் மட்டும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார், அபிலாசன் ,விஜயன், பழனிவேல் ராஜபாண்டியன், மனோஜ், பாபு, முகமது இஸ்மாயில், ராஜகோபால், தினேஷ்குமார், யுவராஜ் ,திருஞானம் பிரவீன் குமார், விக்னேஸ்வரன், சூரியகுமார் , ஸ்டீபன் ராஜ், கதிரவன் மற்றும் ஹக்கீம் ஆகிய 18 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனையின் போது ஏற்கப்பட்டது.
இந்த சுயேச்சை வேட்பாளர்களின் அபிடவிட்டுகளை தயார் செய்தது ஒரே நோட்டரி என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்திலிருந்து 18 சுயேட்சை வேட்பாளர்களை களம் இறங்கியது செந்தில் பாலாஜி தான் என பாரதிய ஜனதாவின் அண்ணாமலை மற்றும் பல்வேறு எதிர்க்கட்சியினர் பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் மோசடியில் ஈடுபட இவர்கள் களம் இறக்க வைத்து செலவு செய்ய திமுக அதிரடி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு சட்டமன்ற தொகுதியில் 283 ஓட்டுச்சாவடிகள் இருக்கிறது.
ஒரு ஓட்டு சாவடிக்கு ஒரு வேட்பாளர் தரப்பில் ஒரு ஏஜென்ட் ஒரு மாற்று ஏஜென்ட் என இரண்டு பேர் நியமனம் செய்யப்படலாம். இதன்படி பார்த்தால் ஒரு வேட்பாளருக்கு தெற்கு தொகுதியில் 566 ஏஜென்டுகள் தேவைப்படும். 18 வேட்பாளருக்கு 10,188 ஓட்டுச் சாவடி ஏஜென்டுகள் தேவை. ஒரு வேட்பாளர் 40 லட்ச ரூபாய் தேர்தல் செலவு செய்யலாம்.
உரிய ஆதாரம் வைத்து இதற்கான தொகையை கையில் வைத்திருக்கலாம். இதன்படி பார்த்தால் 18 வேட்பாளர்கள் மூலமாக 7.20 கோடி ரூபாய் செலவு செய்ய முடியும். சுயேட்சை வேட்பாளர்கள் மூலமாக பகிரங்கமாக பணத்தை ஆதாரங்களுடன் இறக்குவதற்கு இந்த ஏற்பாடுகளை செந்தில் பாலாஜி தரப்பு செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
கரூர் மாவட்டத்திலிருந்து 18 சுயேட்சை வேட்பாளர்கள் அதிரடியாக ஒரே தொகுதியில் களம் இறங்கி இருப்பது தேர்தல் கமிஷன் அதிகாரிகளை திகில் அடைய செய்திருக்கிறது. இந்த வேட்பாளர்களின் பின்னணி அவர்களின் சொத்து இதர விவரங்களை வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி மூலமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் வேறு எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் நுட்பமாக கோவை தெற்கு தொகுதியில் வெளியூர் வேட்பாளர்களின் ஆதிக்கம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
