கோவை மாவட்டத்தில் 4516 ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு…
கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டு கேட்டு நடப்பாண்டில் இதுவரை 12,231 பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியில்லாத 4516 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளது. 11,66,220 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. 34,29,650 பேர் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9.76 லட்சம் பாமாயில் பாக்கெட் போன்றவை ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு கேட்டு குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. ஆன்லைன் மூலமாக புதிய கார்டு கேட்டும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரேஷன்கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் தங்களது பெயர்களை நீக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கார்டுகளில் பெயர் நீக்கம் செய்தவர்கள் புதிதாக தனி கார்டு வழங்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மாவட்ட அளவில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 12,231 பேர் புதிய ரேஷன் கேட்டு விண்ணப்பித்தனர்.
இதில் 4,516 பேருக்கு ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் தரப்பட்டது. 4,538 பேருக்கு ரேஷன் கார்டு வழங்காமல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 1197 பேருக்கு ரேஷன் கார்டு அச்சடித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 40107 விண்ணப்பங்கள் புதிய ரேஷன் கார்டிற்காக பெறப்பட்டது.
இதில் 19,437 பேருக்கு கார்டு வழங்க ஒப்புதல் தரப்பட்டது. 18,240 பேருக்கு கார்டு வழங்காமல் நிராகரிக்கப்பட்டது. 14,667 பேருக்கு கார்டு பிரிண்ட் செய்து வழங்க ஏற்பாடு நடக்கிறது. மாவட்ட அளவில் ஆன்லைன் ஆப் லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது
குறிப்பாக குடும்பத்திலிருந்து பிரிந்தவர்கள் திருமணமாகி சென்றவர்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து வருகின்றனர். கூடுதல் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையால் பயனாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
மாவட்ட அளவில் ரேஷன் பயனாளிகள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 40 ஆயிரத்திற்கும் மேல் அதிகமாகி விட்டது. வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து கோவை வந்து தங்கி வேலை செய்யும். ரேஷன்கார்டுதாரர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக பல ஆயிரம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
சிலர் தனி கார்டு வேண்டும் என குடும்பத்திலிருந்து பிரிந்து கார்டு கேட்கிறார்கள். முறையாக ஆவணங்கள் இன்றி குறிப்பாக கேஸ் சிலிண்டர் வைத்து ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் தரப்படுகிறது. சிலர் குடும்ப பிரச்னை காரணமாக கணவர் மனைவி பிரிந்து தனி ரேஷன் கார்டு விண்ணப்பம் தருகிறார்கள்.
முறையாக விவகாரத்து பெற்று ஆதாரங்களை ஒப்படைத்தால் தான் பிரிந்தவர்களுக்கு தனி ரேஷன் கார்டு வழங்கப்படும். ரேஷன் கார்டு பெற ஆதார் ஆவணம் போதும். உரிமை தொகை, இதர உதவிகள் பெற ரேஷன் கார்டுகளை போலியாக பெற முடியாது. உரிய ஆவணங்கள் வைத்து சோதனை செய்தால் குறிப்பாக ஆதார் ஒப்பீடு மூலமாக ரேஷன் கார்டுதாரர்களின் நிலை தெரிந்து விடும்.
போலியாக ஆதாரம் வைத்து கார்டு பெற முடியாது. இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டு வருகிறது என வழங்கல் பிரிவினர் தெரிவித்தனர்.
