கோவை எட்டிமடை வனப்பகுதியில் திடீர் நிலச்சரிவு…!
கோலை மாவட்டம் மதுக்கரை வன சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை, சின்னாம்பதி,புதுப்பதி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது
யானைகள், சிறுத்தைகள், மான்கள் காட்டெருமை குரங்குகள் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியில் சமீப நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் எட்டிமடை மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும் சத்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன.
திடீரென சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறிய வளத்துறையினர் இந்த மண் சரிவினால். வன விலங்குகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட மண் சரிவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் காரணமாக அடர்த்தி குறைந்த மலை சரிவுகள் உருண்டு விழுவதாக தெரிகிறது.
மதுக்கரை எட்டிமடை வாளையார் சிறுவாணி ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மண் சரிவுகள் காணப்படுகிறது. பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பெரிய அளவு மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என கனிம வளம் மற்றும் புவியியல் துறையினர் மூலம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
