guideline value: தமிழகத்தில் விரைவில் புதிய வழிகாட்டி மதிப்பு அமலாக்க உத்தரவு…
தமிழகத்தில் கடந்த 2023 ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு (guideline value) உயர்த்தப்பட்டது.
அதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக மாநில அளவில் 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
விரைவில் ஓரிரு மாதங்களில் புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணமாக 11% சொத்து மதிப்பிலிருந்து பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய வழிகாட்டி மதிப்பில் கூடுதல் தொகை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெயின் ரோடு பகுதியில் என்ன கைடு லைன் மதிப்பு இருக்கிறதோ அதே அளவிற்கு குறுக்குத்தெரு , சந்துப் பகுதியில் வழிகாட்டி மதிப்பு உயர்த்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது போன்ற வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டால் நில விற்பனை மேலும் பாதிக்கப்படும்.
தமிழக அரசு தற்போது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் அதிக அளவு கடன் நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சரிகட்டும் வகையில் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் புதிய கைடு லைன் மதிப்பு நிர்ணயம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
கைடு லைன் வேல்யூ அதிகமானால் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மாநில அளவில் நிலம் வாங்குபவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிலம் வாங்குவது சொத்து பதிவு செய்வது இயலாத காரியமாக இருக்கிறது. இந்த நிலையில் வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டால் ஏழை மக்களின் நிலம் வாங்கும் கனவு நிறைவேறாமல் போய்விடும் நிலைமை இருக்கிறது.
எனவே ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டி மதிப்பில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என பதிவுத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கக் கூடாது. குறிப்பிட்ட சதுர அடி பரப்பில் நில வாங்குபவருக்கு சலுகை காட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சாத்தியம் உள்ளதா என தெரியவில்லை.
புதிய வழிகாட்டி மதிப்பு வர இருப்பதால் நிலுவை பத்திரங்களை விரைவாக பதிவு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். மாநில அளவில் குறிப்பிட்ட சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலம் வாங்கி விற்பனை செய்வதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத காடு எந்த வசதியும் இல்லாத பகுதிகளில் ஏ ஐ போட்டோ வீடியோ காட்டி கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து நிலத்தை வாங்க வைப்பது இவர்களின் யுக்தியாக இருக்கிறது.
எனவே அடிப்படை வசதி இல்லாத கிராமங்களில் பத்திரம் பதிவு செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
