கோவை வஉசி பூங்காவில் பாதுகாப்பின்றி தவிக்கும் பறவைகள்….
கோவை மாநகராட்சி வஉசி உயிரியல் பூங்கா 4.50 ஏக்கர் பரப்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது.
160க்கும் மேற்பட்ட வகையான ஆயிரத்திற்கும் உயிரினங்கள் இங்கே இருந்தன. இந்த பூங்கா கடந்த ஆண்டு மூடப்பட்டது. இங்கே இருந்த உயிரினங்கள் வேறு பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மக்கள் முக்கிய பொழுது போக்கு பூங்கா மூடப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பூங்கா மூடினாலும் தற்போது மயில், கிளி, வாத்து, ஈமு கோழி மற்றும் ஆமை போன்றவை பூங்காவில் கூண்டுகளில் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் பயன்படுத்திய காலி கூண்டுகள் இன்னும் அப்படியே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் பறவைகள் மற்றும் பாம்புகள் அடைக்கப்பட்டு இருந்த கூண்டுகள் அகற்றப்பட்டது. அங்கே தொழிலாளர்கள் தங்கி பணி செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டது.
பூங்கா வளாகத்தின் ஒரு பகுதியில் சர்வேச தரத்தில் 1.98 கோடி ரூபாய் செலவில் நீச்சல் குளம் கட்டும் பணி நடக்கிறது. இதேபோல் பொதுமக்கள் மற்றும் நீச்சல் பயிற்சி பெறுவதற்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நீச்சல் குளம் அமைக்கும் பணியும் நடக்கிறது.
இந்த நீச்சல் குளம் பணிகளுக்காக பூங்கா வளாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இருந்த பல்வேறு கட்டுமானங்கள் அகற்றப்பட்டது. சில வகையான மரங்களும் வெட்டப்பட்டுள்ளது வஉசி பூங்கா வளாகத்தில் 9.89 கோடி ரூபாய் செலவில் பறவைகள் பூங்கா அமைக்க ஏற்கனவே விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு இன்னும் திட்ட மதிப்பீடு பெற்று பணிகள் துவக்கப்படவில்லை.4.50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் நீச்சல் குளம் மற்றும் உடைமாற்று அறைகள், பார்க்கிங் பகுதி
போக மீதம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாகவே இடம் கிடைக்கும் நிலைமை இருக்கிறது. ஏற்கனவே பூங்கா வளாகத்தில் வௌவால்கள் அதிகளவு தொங்கி கொண்டிருக்கின்றன. இதற்கே போதுமான இடம் இல்லாத சூழலில் இருக்கிறது. இந்த நிலையில் பறவைகள் பூங்கா அமைத்தால் அதற்கு போதுமான இடம் கிடைக்காது,
மயில், வாத்து, கிளி போன்றவை அடைப்பதற்கு கூடு இடம் போததாது. ரோசி பெலிக்கன், சாரஸ் கிரே, பெயிண்டட் கிரே போன்ற பெரிய சைஸ் பறவைகள், நீர் குளங்கள், கானக தோற்றத்திலான கூண்டுகள் இயற்கை காடுகள் அமைக்க இடவசதி இருக்காது. சிறிய கூண்டுகளில் அதிக பறவைகள் அடைப்பது இயலாத காரியமாகி விடும். ஏற்கனவே பூங்கா வளாகத்தில் ஏகப்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
கூடுதலாக மாற்றங்கள் செய்வதாக மரங்களை அகற்றி, வேறு திட்ட பணிகளுக்கு இடம் ஒதுக்கினால் பூங்கா பொலிவு இல்லாமல் போய் விடும். எனவே கூடுதல் இடவசதி குறிப்பாக அருகேயுள்ள வஉசி பொதுமக்கள் பூங்காவிலும் பறவைகள் பூங்காவிற்கு இடம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்ட பணிகள் நடப்பதால் இங்கே அடைக்கப்பட்டுள்ள பறவைகள் சத்தம் தாங்க முடியாமல் தவிப்படைந்துள்ளன. பறவைகளின் இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை சூழலை அடித்து விட்டு செயற்கையாக பறவைகள் பூங்கா அமைத்தால் அது வீணாகிவிடும் என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
