கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை… கைதான குற்றவாளி கால் உடைப்பு…!
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அவர் திடீரென நேற்று காணாமல் போய்விட்டார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இது தொடர்பாக சூலூர் போலீசில் புகார் தரப்பட்டது. இந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் கிடந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
போலீசாரின் நடவடிக்கை கண்டித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சூலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே மெயின் ரோட்டில் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
குழந்தையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக நாகப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட கார்த்திக் (33 ) மற்றும் அவருக்கு உதவியதாக நண்பர் மோகன்ராஜ் (35 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கார்த்திக்கை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசார் முயற்சி செய்தபோது அவர் தப்பிக்க முயன்றார் . மாடியில் இருந்து அவர் கீழே குதித்ததாகவும் அதில் அவரது கால்கள் முறிந்து விட்டதாகவும் தெரியவந்தது . இதைத் தொடர்ந்து கார்த்திக் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கார்த்திக் கூலி வேலை செய்து வருவதாக தெரிகிறது. சிறுமியின் வீட்டின் அருகே இவர் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் சிறுமி இவரிடம் பேசி உள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கார்த்திக் சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
சிறுமி எதிர்ப்பு காட்டியதால் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் கோவை மட்டுமின்றி மாநில அளவில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை தமிழக போலீஸ் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார்.
இது தொடர்பாக சூலூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில் குற்றவாளியை உயிருடன் விட்டிருக்கக் கூடாது. அவரை சுட்டு என்கவுண்டர் செய்திருக்க வேண்டும். இது போன்ற வெறிபிடித்த மிருகங்களை போலீசார் விட்டு வைக்க கூடாது. சிறுமியை காணவில்லை என போலீசில் புகார் அளித்த போது போலீசார் உடனடியாக தேடி கண்டுபிடிக்காமல் பல மணி நேரம் தாமதம் செய்துள்ளனர். போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என தெரிவித்தனர்.
சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டிய போலீசார் மீது போலீஸ் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவை மாவட்ட எஸ்பி மாற்றப்பட்ட நிலையில் சிறுமி மாயமான விவகாரத்தில் அலட்சியம் காட்டப்பட்டதாக தெரிகிறது.
உறவினர்களை சந்தித்து தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆறுதல் கூறினார். அப்போது அவர் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தருவோம். இந்த வழக்கில் தீவிரமான நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.
