கோவை நகரில் ரவுடிகளை பிடித்து பிணைய பத்திரம் பெற நடவடிக்கை

கோவை மாநகர போலீசார் 48 மணி நேர அதிரடி ஆபரேஷன் நடத்தி பி, சி பிரிவு ரவுடிகளை பிடித்து பிணை பத்திரம் பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்படி, இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை கோவை மாநகர முழுவதும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களுக்கு எதிராக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் சரகத்திலும் சரித்திர பதிவேட்டில் உள்ள பி மற்றும் சி பிரிவு ரவுடிகள் சம்பந்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் ஒருங்கிணைந்து கண்காணித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது, ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்களிடம் பிணை பத்திரம் பெற போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாநகரில் சரித்திர பதிவேடு கொண்ட பி பிரிவு ரவுடிகள் 177 பேரும், சி பிரிவு ரவுடிகள் 726 பேரும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிறிய, சிறிய குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 1000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பிடிபடும் ரவுடிகள் அண்மைக் காலங்களில் ஏதேனும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களா, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் முடிவுகள் மற்றும் அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், அவர்களிடம் பிணை பத்திரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடிதடி போன்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல வாகன சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நம்பர் பிளேட், குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள், சந்தேகத்திற்குறிய வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

One thought on “கோவை நகரில் ரவுடிகளை பிடித்து பிணைய பத்திரம் பெற நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *