கோவை மாவட்டத்தில் 197 டாஸ்மாக் பார்கள் மூடல்

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தது.

இவற்றில் கடந்த சில நாட்களுக்கு முன் 69 மதுபான கடைகள் மூடப்பட்டது. பள்ளி, கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள கடைகள் மூடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 229 மதுபான கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாநில அளவில் டாஸ்மாக் பார்களை மொத்தமாக மூடி சீல் வைக்க நேற்று மாலை உத்தரவு வழங்கப்பட்டது. இதன்படி இன்று அனைத்து பார்களும் அதிரடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. கோவை வடக்கு கலால் மாவட்டத்தில் 107 பார்களும், தெற்கு கலால் மாவட்டத்தில் 90 பார்களும் மூடப்பட்டது.

மாவட்ட அளவில் 197 பார்கள் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தும் டாஸ்மாக் மேலாளர்கள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கலால் அதிகாரிகள் மூலமாக சரி பார்க்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் பார்களை திறக்க கூடாது என உத்தரவிடப்பட்டது.

பார்களின் ஒப்பந்த காலம் ஜூன் மாதத்துடன் முடிவு பெற்றது. ஆனால் பார்களுக்கு முன் கூட்டியே ஏலம் விட திட்டமிடப்படவில்லை. பார் ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மூடி உத்தரவு வழங்கியது டாஸ்மாக் நிர்வாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபான கடைகளில் மது வாங்குபவர்களில் பலர் அங்கேயே பாட்டில் திறந்த மது குடிப்பதாகவும், சிலர் ரோட்டோரம், பஸ் ஸ்டாப் பகுதியில் மது குடித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்ட பார் விற்பனையாளர் சங்கத்தினர் கூறுகையில், “பார்களை திரும்ப திறக்கும் எண்ணத்தில் தமிழக அரசு இல்லை. வேறு திட்டத்தை மனதில் வைத்து பார் ஊழியர்களை மொத்தமாக காலி செய்த பின்னர் அமலாக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

டாஸ்மாக்கில் 10 ரூபாய் வசூல், பாட்டில் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. சில இடங்களில் 20 ரூபாய் வசூல் நடக்கிறது. இதற்கு தீர்வு காணாமல் வேறு ரீதியாக திட்டமிட்டு மூடி விட்டார்கள். மது வாங்குபவர்கள் வீட்டில் குடிக்க தயங்குகிறார்கள். வசதி உள்ளவர்கள் எப்எல் 2 பார்களுக்கு செல்கிறார்கள். பலர் பொது இடங்களில் மது குடிக்கிறார்கள். பார் திறப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை, நாங்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கிறோம். “என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *