கையேந்தும் சிறார்களை கரையேற்ற ஆளில்லை…

கோவை நகர், புறநகரில் ரோட்டோரம் சிலர் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சிறார்களை வைத்து பிச்சை எடுக்க கூடாது.

அப்படி செய்தால் வழக்கு பதிவு செய்து கைது செய்ய சட்டம் இருக்கிறது. இதற்காக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் உள்ளூர் போலீசார் மூலமாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் நகர், புறநகரில் கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது அதிகமாகி விட்டது. வடமாநிலங்களில் இருந்து சிலர் கோவை வந்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர்.

குழந்தைகள் அழாமல் இருக்க அதற்கு மருந்து கொடுத்து தூங்க வைத்து கொளுத்தும் வெயிலில் பிச்சை எடுக்கின்றனர். குழந்தைகளை காட்டி பிச்சை கேட்டால் அதிக பணம் கிடைப்பதால் இதுபோன்ற செயல்களில் அதிக நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் அண்ணா சிலை லட்சமி மில்ஸ், ஆவாரம்பாளையம் ரோடு, ஹோப்ஸ், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், ஈச்சனாரி உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர்.

ஆனால் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெயரளவிற்கு கூட வழக்கு பதிவு செய்வதில்லை. ரோட்டோரம் வசிக்கும் சிறார்களை மீட்க மறுவாழ்வு கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த சிறார்களை மீட்க, அவர்களுக்கு தங்குமிடம் கல்வி உள்ளிட்ட வசதிகளை செய்ய, பிச்சை தொழில் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு தர எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இதனால் பிச்சை எடுக்க கூட்டம் குவிவது வாடிக்கையாகி விட்டது. கோயில் பஸ் ஸ்டாண்ட், பொது இடங்களில் பிச்சை எடுக்க பிரதான இடம் பிடிக்க தகராறு செய்வதும் நடக்கிறது, தன்னார்வ அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி பெறுகின்றனர். ஆனால் குழந்தைகளை மீட்க, பாதுகாக்க போதுமான முயற்சி எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினரும் ஆர்வம் காட்டாமல் அலட்சியமாக இருக்கின்றனர். பள்ளி செல்லும் வயதில் உள்ள சிறார் சிக்னல்களை கை நீட்டி பிச்சை கேட்பதும் கார் கண்ணாடி துடைத்து விட்டு காசு கேட்கும் அவலமும் தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *