கோனியம்மன் கோயிலில் உண்டியல் கொள்ளை : ஊழியர்கள் 4 பேர் கைது
கைதான பாலசுப்பிரமணியன் மற்றும் சரவணன்
கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
அப்போது திருவிழா காலங்களில் பயன்படுத்தும் ஆறு உண்டியலில் ஒரு உண்டியலை காணவில்லை. அதை கோயில் ஊழியர்கள் ரகசியமாக கோயிலுக்கு பின்புறம் எடுத்துச் சென்று திறந்து அதில் உள்ள பணத்தை திருடி சென்று விட்டதாக பக்தர் ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புகார் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நேற்று இரவு கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது .இதில் உண்டியல் களவாடப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது . கோயில் நிர்வாக அலுவலர் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கோயிலில் பணியாற்றி வந்த டிக்கெட் விநியோகிப்பாளர் பாலசுப்பிரமணியன் (52) ஊழியர் சரவணன் (34) , பிரதீப் குமார் (31) மற்றும் கிருஷ்ணராஜ் (54) ஆகியோரை பெரிய கடைவீதி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் உண்டியலில் இருந்து 31,000 ரூபாய் திருடி அதை பங்கு போட்டுக் கொண்டதாக தெரியவந்தது. கோயிலில் பணி செய்த ஊழியர்களே கோயிலில் உண்டியல் கொள்ளையடித்த சம்பவம் பக்தர்கள் வட்டாரத்தில் பரபரப்பில் ஏற்படுத்தி இருக்கிறது.
