குளத்தில் ஆபத்தான முறையில் போட்டோ எடுக்கும் வாலிபர்கள்…
கோவை தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ண குளம் கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டது. நடைபாதை, பூங்கா, செல்பி பாயிண்ட், விளையாட்டு கூடம் போன்றவை அமைக்கப்பட்டது.
குளத்தின் மீது நின்று போட்டோ எடுக்கும் வகையில் |மிதவை பாலம் பகுதியும் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியில் உயரமான இரும்பு தடுப்பு அமைக்காமல் விட்டதால் வாலிபர்கள் சிலர் அதன் மீது ஏறி நின்று ஆபத்தான வகையில் செல்போனில் போட்டோ எடுக்கிறார்கள். சிலர் கம்பி மீது ஏறி நின்று போஸ் கொடுக்கிறார்கள். தவறி விழுந்தால் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருந்தும் இது போன்ற விபரீத விளையாட்டுகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
மாநகராட்சியினர் இந்த பகுதியில் பெரிய இரும்பு தடுப்பு போட வேண்டும். உயிர் பாதுகாப்பு வழங்கும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குளக்கரையின் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடத்தவில்லை. மலர் செடிகள் வைக்கும் இடங்கள் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து கிடக்கிறது.
பல்வேறு இடங்களில் பசுமை பகுதிக்கு மாற்றாக குப்பகைளும் காய்ந்து போன பொருட்களும் கிடக்கிறது. இதை மாநகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
