சுடுமண் காதணிகள்…
மின்னும் ஜிமிக்கி, கலர் கலராய் கம்மல் என இன்றைய இளசுகளின் காதுகளில் பேஷன் அணிகலன்கள் அலங்கரித்து வருகிறது.
ஆதி காலத்தில், அதாவது 5ம் நூற்றாண்டு காலத்திலேயே கொங்கு வட்டார பெண்களின் காதுகளை கம்மல்கள் அலங்கரித்துள்ளன. இவை சுடுமண் காதணிகள் என அழைக்கப்பட்டன. செம்மண்ணில் டிசைன் உருவாக்கி சுட வைத்து காதில் அணிவது அந்த காலத்து பேஷன். மீன், புலி, வில், வாள் என விதவிதமான வடிவங்களை சுடுமண்ணில் உருவாக்கி காதில் அணிந்து வலம் வந்தனர்.
கொங்கு நாட்டு வீர மங்கைகள். மரத்தின் வேர் நரம்பை எடுத்து அதில் மணிகளை கோர்த்து அணியும் வழக்கமும் இருந்துள்ளது. யானை தந்தத்தை செலுத்தி வேலைப்பாடுகளுடன் கூடிய கம்மல்களையும் உருவாக்கியுள்ளனர்.
கடந்த 1980ம் ஆண்டில் தொல்லியல் துறையினர் போளுவாம்பட்டியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 5ம் நூற்றாண்டின் சுடு மண் பொம்மைகள், சுடுமண் ஆபரணங்கள் கிடைத்தன. இந்த ஆபரணங்கள் இயக்கன் என்ற சிறு தெய்வத்தை குறிக்கும் வகையில் இருந்தது. பேரூர், மத்வராயபுரம், மருதமலை, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதியில் சுடுமண் காதணிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் கிடைத்தன.
இவை வரலாற்று பொக்கிஷங்களாக தொல்லியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நொய்யல் நதிக்கரையில் விவசாய பணிகளின் போது சில சுடுமண் பொருட்கள், ஆபரணங்கள் கிடைத்துள்ளன. இவற்றை சிலர் மூத்த குடிமக்களின் நினைவு சின்னமாக பாதுகாத்து வருகின்றனர்.
சுடுமண் ஆபரணங்களுக்காக பழங்கால பெண்கள் காதுகளை பெரிய அளவில் துளையிட்டுள்ளனர். விலங்குகளின் எலும்புகளை கொண்டு காதுகளை துளையிடுவது வழக்கமாக இருந்தது. சிறுமிகளின் காதுகளை பெரிதாக துளையிட்டு சுடுமண் தொங்கட்டான்களை மாட்டி விடுவார்கள். 10 முதல் 80 கிராம் வரையிலான சுடுமண் காதணிகள் தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சுடுமண் ஆபரணங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. மேல், கீழ், நடு காதுகளில் மட்டுமின்றி மூக்கிலும் காதணிகள் பயன்படுத்தியுள்ளனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் சுடுமண் காதணிகளில் அரசுகளின் சின்னமும் இடம் பெற்றுள்ளது. சுடுமண் காதணிகள் பழங்கால பெண்களின் வீரத்திற்கு சான்றாகவும் இருக்கிறது.
இரும்பு, மணிகள், பவழங்கள் கிடைத்த போது சுடுமண் காதணிகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்தது. இருளர்கள் சுடுமண் பொருட்களை தவிர்த்து மூங்கில் பொருட்களை காதணிகளாக பயன்படுத்தினர். குறிப்பாக மூங்கில் குழல்களை காதணிகளாக அணிந்து வலம் வந்தனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், சுடுமண் காதணிகள் வரலாற்று அடையாளமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
