மூதாட்டி தூக்கம் தலையணை கீழே சாவி எடுத்து திருடிய கில்லாடி…
கோவை கணபதி, டி.பாலன் நகர், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (63). இவர், தனது பேத்தியுடன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு, வீட்டின் முன் கதவைப் பூட்டி, இருவரும் படுக்கையறைக்கு தூங்க சென்றனர்.
அப்போது நள்ளிரவில் கதவின் தாழ்ப்பாளை திறந்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், படுக்கையறைக்குள் நைசாக நுழைந்துள்ளார். அந்த மர்ம நபர், மூதாட்டியும் அவரது பேத்தியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பயன்படுத்தி மூதாட்டியின் தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பீரோ சாவியை நைசாக எடுத்துள்ளார். தொடர்ந்து பீரோவைத் திறந்து, அதில் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்கக் கம்மல், 2 கிராம் தங்க மோதிரம், ஒரு பவுன் தங்க டாலர் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றைச் சுருட்டிக்கொண்டு தப்பி சென்றார்.
மூதாட்டி மற்றும் அவரது பேத்தி காலையில் எழுந்து பார்த்தபோது தான் பீரோ திறக்கப்பட்டு தங்க நகைகளும், மொபைல் போனும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கஸ்தூரி, உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுனர்கள் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்து சேகரித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிவிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
