கோவையில் உடைந்து சாயும் மின் கம்பங்கள்
கோவை மாவட்டத்தில் வீடு, விவசாயம், வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு பிரிவினருக்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது,
மாவட்ட அளவில் 25 லட்சத்திற்கு மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதுமான அளவு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. மின்கம்பங்கள் பற்றாக்குறை காரணமாக மின் இணைப்புகள் வழங்கும் பணி தாமதமாகி வருவதாக தெரிகிறது. குறிப்பாக புதிதாக உருவாக்கப்படும் லே அவுட்கள், கிராம பகுதியில் தொலைதூரத்தில் உள்ள வீடுகள்,
விவசாய தோட்டங்கள், வணிக வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பொது மக்களிடம் மின் கம்பங்கள் தற்போது இருப்பில் இல்லை. மின்கம்பங்கள் வந்த பின்னர் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என காலதாமதம் செய்வது அதிகமாகிவிட்டது.
| மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே வாங்கிய மின் கம்பங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் வீணாக போடப்பட்டுள்ளது. குறிப்பாக ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், ஆர்எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் பயன்பாடு இல்லாமல் ரோட்டாரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பழுதடைந்த மின் கம்பங்களும் அகற்றப்படாமல் ரோட்டோரங்களில் காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருக்கிறது. மின் கம்பங்களை கொள்முதல் செய்வதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஏற்கனவே வாங்கிய புதிய மின்கம்பங்களை பயன்படுத்தாமல் மின்வாரியத்தனர் அலட்சியம் காட்டி வருவது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
| பழுதடைந்த மின் கம்பம், பராமரிப்பு இல்லாத மின்கம்பங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். மின்கம்பங்களை சிலர் சேதம் செய்திருப்பதாக தெரிகிறது. வாகனம் மோதியும், குப்பை, சாக்கடை கால்வாய் காரணமாகவும் மின்கம்பங்கள் சேதமாகி விட்டதாக தெரிகிறது. இந்த மின்கம்பங்கள் தொடர்பாக ஆய்வு செய்து அவற்றுக்கு மாற்றாக புதிய மின் கம்பங்களை அமைக்க வேண்டும்.
சில இடங்களில் மின்கம்பங்கள் பற்றாக்குறை இருக்கிறது. அந்த இடங்களில் கூடுதலாக மின்கம்பங்கள் வைக்க வேண்டும். சிலந்தி வலை போல் மின் கம்பங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
