கோவை ஜி ஹெச் : வெளி நோயாளிகள் பிரிவுகள் மூடல்…
கோவை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த 1974ம் ஆண்டில் கட்டப்பட்டது.
இந்த பிரிவில் காலை முதல் மதியம் வரை அதிக கூட்டம் காணப்படுகிறது. பழைய கட்டடத்தில் 2 தளங்களில் இந்த பிரிவு செயல்படுகிறது. தரை தளத்தில் ஆண்,பெண் மருத்துவ பிரிவு, கட்டு கட்டுதல், ஊசி போடுதல் பிரிவு, முதல் தளத்தில் காது மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் அறுவை அரங்கம், நரம்பியல் பிரிவு, இரண்டாவது தளத்தில் பால்வினை நோய் பிரிவு, தோல் மருத்துவம், நரம்பு, மன நலம், சித்த வைத்தியம், போதை மீட்பு மையம் உள்ளது.
இந்த கட்டடம் பழுதான காரணத்தினால் பெரும்பாலான மருத்துவ பிரிவுகள் முடக்கப்பட்டது. சில பிரிவுகள் ஆள் இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் சிகிச்சை வழங்கப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாகவும் சில பிரிவுகள் மூடப்பட்டிருக்கிறது. இதர பகுதிகளில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை தரப்படுகிறது.
பராமரிப்பு பணியால் இந்த வளாகத்தில் சில இடங்களில் மின் விளக்குகள் அகற்றப்பட்டுள்ளது. படிக்கட்டு, பாதைகள் அட்டை வைத்து அடைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை பிரிவு தொடர்பாக அறிவிப்பு வழங்கப்படவில்லை. இதனால் நோயாளிகள் எந்த பிரிவிற்கு எங்கு செல்வது, மாற்றப்பட்ட பிரிவுகள் எங்கே இருக்கிறது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
