பயிர் காப்பீடு செய்ய கோவை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு…
தமிழ்நாட்டில் 2026-27ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் பருவத்திற்கான அறிக்கை பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது காரிப் பருவ சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் நெல், மக்காச்சோளம் சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்யலாம்.
மக்காச்சோளம், சோளம் மற்றும் கொள்ளுப்பயிரினை 16.09.2026 தேதிக்குள்ளும் காப்பீடு செய்யலாம். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 20 சதவீதம் மட்டும் காப்பீட்டு கட்டணமாக ஏக்கர் ஒன்றிற்கு நெல் பயிருக்கு ரூ.786, மக்காச்சோளத்திற்கு ரூ.740, சோளத்திற்கு ரூ.282, உளுந்திற்கு ரூ.374, பச்சைப்பயறுக்கு ரூ.374 மற்றும் கொள்ளுப்பயறுக்கு ரூ.238 மட்டுமே காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
எனவே, காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொதுச் சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) தேசிய பயிர்க் காப்பீட்டு இணையகளத்தில் உள்ள விவசாயிகள்
www.pmfby.gov.in இணையத்தில் நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம். கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ.அடங்கல், விதைப்புச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின்,
அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர்க் காப்பீட்டு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது கிட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
