கிருஷ்ண ஜெயந்தி விழா குட்டீஸ்கள் குதூகலம்…

கோவை பிளமேடு கொடிசியா வளாகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீஜெகன்நாதர் ஹரே கிருஷ்ணா கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து காலை 7 மணிக்கு தரிசன ஆரத்தி நடைபெற்றது. பக்தி விநோத ஸ்வாமி மகாராஜ் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு வழங்கினார். ஸ்ரீராதா கிருஷ்ணர் பகவான் ஜகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

அகண்ட நாம சங்கீர்த்தனம், கீர்த்தனைகள் மற்றும் பகவானின் திருநாமங்களை உச்சரிக்கும் நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் நடைபெற்றன. உலகம் முழுவதும் அமைதி நிலவவும், அனைத்து மக்களும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும் வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற ஹோமத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு, உலக அமைதி மக்கள் நலன், நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இக்கோயிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஜன்மாஷ்டமி விழாவின் முக்கிய சிறப்பம்சமாக மாபெரும் 1,008 கலச அபிஷேகம் நடைபெற்றது. தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மற்றும் செம்பு பாத்திரங்களால் தயாரிக்கப்பட்ட 1,008 கலசங்களை கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு அபிஷேகத்தில் இந்தியாவின் பல்வேறு புனித நதிகள் மற்றும் தீர்த்த தலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் பயன்படுத்தப்பட்டது.

வேத மந்திரங்கள், பக்தி பாடல்கள் மற்றும் கூட்டு சங்கீர்த்தனத்துடன் நடைபெற்ற இந்த அபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டனர். மேலும், பள்ளி மாணவர்களுக்காக இஸ்கான் சார்பில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பல குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் போட்டு அசத்தினர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நாளை மூன்றாம் நாள் ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் நடக்கிறது.

One thought on “கிருஷ்ண ஜெயந்தி விழா குட்டீஸ்கள் குதூகலம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *