கோவை போலீசார் மீது கேரளா போலீசார் வழக்கு…?!
கேரள மாநிலம் ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (52). இவரிடம் நேற்று இரவு கோவை தடாகம் போலீசார் கஞ்சா விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அப்போது அவரிடம் முரட்டுத்தனமாக போலீசார் நடந்து கொண்டதாகவும் அவரது விலா எலும்பில் தாக்கியதாகவும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
கடும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட முருகேஷ் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோட்டத்துறா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் போலீசாரின் தாக்குதல் தொடர்பாக டாக்டர்களிடம் விளக்கமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோட்டத்துறா போலீசாருக்கு புகார் தரப்பட்டது. முருகேஷ் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர். இவர் மீது கேரள மாநில போலீசில் வேற எந்த வழக்குகளும் கிடையாது.
கோவை போலீசார் கேரள மாநில போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் கேரள மாநில எல்லைக்குள் சென்று விசாரணை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆதிவாசியை துன்புறுத்தி தாக்குதல் நடத்திய விவகாரம் மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக ஆதிவாசிகள் நல ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளா போலீசார் தடாகம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணை நடத்திய போலீசார் மீது கேரள மாநிலம் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கும் விவகாரம் மேலும் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
