கோவை மாநகராட்சியில் 132 டெண்டர் ரத்து
கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் 100 வார்டுகளில் பல்வேறு திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.
முன்னதாக இந்த பணிகளுக்கு மாநகராட்சி. நிர்வாகத்தின் அனுமதி (ஏ சேங்சன்) வழங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு சி சேங்சன் அதாவது கவுன்சில் கூட்டத்தில் வைத்து தீர்மான ஒப்புதல் தரப்படவில்லை. மாநகர் முழுவதும் மழை நீர் வடிகால், தடுப்பு சுவர், போர்வெல், கழிவறை என பல்வேறு திட்ட பணிகள் துவக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது.
இதில் சில திட்ட பணிகள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில பணிகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக எந்த முடிவும் அறிவிக்காமல் மவுனமாக இருக்கிறது. இதேபோல் மாநகர் முழுவதும் பூங்கா கட்டுமான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது.
மாநகராட்சி கவுன்சிலர்கள், “கடந்த காலங்களில் தேர்தலுக்கு முன் நாங்கள் மாநகராட்சி பொறியாளர்களுடன் இணைந்து வார்டு திட்ட பணிகளுக்கு ஆய்வு செய்தோம். அளவீடு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்தோம். நிர்வாக அனுமதி பெற்ற பின்னர் அந்த பணிகள் துவக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. அதே நேரத்தில் சில பணிகள் ரத்து செய்யாமல் நிலுவை வைத்துள்ளனர். ஆட்சி மாறிய பின்னர் அந்த திட்ட பணிகளின் விவரம் தெரியவில்லை, பணிகளை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் ரத்து செய்ய வேண்டும், என்றனர்.
ஒப்பந்தாரர்கள் கூறுகையில், “எங்களுக்கு கடந்த கால திட்டபணிகள் ரத்து தொடர்பாக தகவல் தரவில்லை. அடுத்து மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்ய போகிறது என தெரியாது, என்றனர்.
