கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனை பட்டா கேட்டு குவிந்த மக்கள்…
கோவை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இலவச மனை, பட்டா கேட்டு 404 விண்ணப்பங்கள் உள்பட 610 விண்ணப்டபங்கள் பெறப்பட்டது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், வருவாய் அலுவலர் சுரேந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இலவசமாக வீடு, மனை பட்டா கேட்டு 404 பேரும், வேலை வாய்ப்பு கேட்டு 13 பேரும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 193 விண்ணப்பங்களும் பெறப்பட்டது. மொத்தமாக 610 விண்ணப்பங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
15 நாளில் தீர்வு காண உத்தரவு வழங்கப்பட்டது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 12 பயனாளிகளுக்கு 19.27 லட்ச ரூபாய் செலவில் செயற்கை கால் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில், 2வது முறைக்கும் மேல் பலர் மகளிர் உரிமை தொகை, வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்ப மனு அளித்திருந்தனர். வாரிசு இல்லாமல், கணவர் இல்லாத நிலையில் உதவி கேட்டு ஏழை மூதாட்டிகள் மனு கொடுத்திருந்தனர்.
உரிமை தொகை இல்லாவிட்டால் முதியோர் உதவி தொகை வழங்கவேண்டும் என முதியோர் கேட்டனர். ஆனால் அதிகாரிகள், முதியோர் உதவி தொகை பெற தகுதியானவர்களுக்கு உரிய பரிந்துரை செய்யவில்லை மகளிர் உரிமை தொகை கேட்டு வரும் விண்ணப்பங்கள் கிடப்பில் இருப்பதால், பெண்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
விண்ணப்ப மனு அளித்த பெண்கள் கூறுகையில், “பெட்டிசன் வாங்கி 15 நாளில் பதில் தர வேண்டும் என்கிறார்கள். ஆனால் விஏஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தில் எந்த விசாரணையும் நடப்பதில்லை. மனை பட்டா, வீடு வேண்டாமா என கேட்கிறார்கள். பல முறை மனு அளித்தும் பழைய மனுக்களை நிராகரித்து புதிது போல் காட்டுகிறார்கள். சிலர் 10 முறை மனு அளித்து விட்டார்கள். தீர்வு காணப்பட்டதாக ஏமாற்றுவதும் நடக்கிறது. ” என்றனர்.
