கோயம்புத்தூரை உருவாக்கிய கோனியம்மன்…
கோவையின் வரலாற்றில் அடையாள சின்னமாக தமிழ்நாடு பகுதியில் அமைந்திருக்கிறது கோனியம்மன் கோயில்.
இருளர்களின் தலைவன் கோவன் கடந்த 16ஆம் நூற்றாண்டில் ஆட்சி நடத்தி வந்தார். இவரது ஆட்சி காலத்தில் மக்கள் வாழ்வில் நன்மைகள் பெற்று பஞ்சம் பசி பட்டினி பிணிகள் ஏற்படாமல் வாழ்வதற்காக கல் ஒன்றை நட்டு வைத்து அம்மன் ஆக உருவாக்கி வழிபாடு நடத்தி வந்தார்.
அதன் பின்னர் கோவை செழித்து சிறப்பாக மாற ஆரம்பித்தது. வனம் காடு வன விலங்குகள் அட்டகாசம் பல்வேறு தொந்தரவுகளால் சீரழிந்து கிடந்த கோவை கோவன் ஆட்சி காலத்தில் சிறப்பான வளர்ச்சியை பெற்றது. இருளர்கள் அம்மனையே தங்கள் குலதெய்வமாக நினைத்து வழிபாடு நடத்தி வந்தனர். பின்னர் இங்கே கோயில் கட்டி வழிபாடு நடத்தி வந்தனர்,
கோவைக்கு வடக்கு திசையில் அமைந்த அம்பிகை காவல் தெய்வமாக நகரை காத்தாள். கோவன் ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார். அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்தார் அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்துரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண் மேடையும் கூட்டி காப்புத்தெய்வமான அம்மனை அங்கே வைத்து வழிபட்டார்.
பேகாவையை காத்த அம்மன் கோனியம்மனாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறார். சிவ அம்சமாக அம்பிகை காட்சி தருகிறார். கோனியம்மன் வடக்கு நோக்கி எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறார். சிவனைப் போல இடது காதில் குண்டலமும் அம்மனுக்கு அணிய வைக்கப்பட்டுள்ளது.
அபூர்வமான அமைப்பு சிவமும் சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது, அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் அமைக்கப்பட்டது. முன்மண்டபத்தில் சரஸ்வதி லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது. அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேச பூஜை உண்டு.
அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் பின் பகுதியில் ஆதி கோனியம்மன் சாந்த விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் பக்கர்களுக்கு காட்சி தருகின்றனர்.
வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. பஞ்சமுக விநாகர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு வேண்டிக் கொண்டால் திருமணத்தடை நீங்கும். குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும். தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ பழம் வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர். நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர். இந்த கோயிலில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
கோவை நகரில் மாசியில் 14 நாள் தேர்த்திருவிழா இங்கு மட்டுமே நடத்தப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் ஆதி கோனியம்மன் மாநகராட்சி பார்க்கிங் பகுதியில் இருந்தது. பின்னர் இடம் மாற்றம் செய்யப்பட்டது. 7 நிலை ராஜ கோபுரத்துடன் தற்போது கோவையின் அடையாளமாக கோனியம்மன் காட்சி தருகிறார்.
600 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த கோயில், திப்பு சுல்தான் உள்ளிட்ட பல்வேறு அரசர்களின் படையெடுப்புக்கு பின்னரும் கோவையின் பாரம்பரிய அடையாளமாகவும், கோவையின் அடையமாகவும் இருக்கிறது. அரசன் கோவன் பெயரில் கோவன்புத்தூராகவும் பின்னர் கோயம்புத்தூராகவும் மாறியது.
