Drone survey: பாதாளம் வரை தோண்டிய கல் குவாரிகள் விரைவில் மூடல்…!
கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய கடந்த காலங்களில் 20 கல் குவாரிகளில் டிரோன் சர்வே நடத்தப்பட்டது.
தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் 141 கல் குவாரிகளில் கடந்த 2 மாதமாக டிரோன் சர்வே நடந்தது. இந்த பணி தற்போது நிறைவடைந்தது. கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, எடுக்கப்பட்ட கனிமங்களின் அளவு, இதில் முறையாக அரசுக்கு செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு முறைப்படுத்த வேண்டும். தினமும் எத்தனை கனமீட்டர் அளவிற்கு கனிம பொருட்கள் சேகரிக்கப்படுகிறது.
கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறதா, கேரளா மாநிலத்திற்கு சப்ளை செய்யப்படும் கனிமங்கள் அளவு குறித்த விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டிரோன் சர்வே விவரங்கள் சென்னையில் உள்ள கனிம வளத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் விதிமுறை மீறல் குவாரிகளின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.
அதிக ஆழம், அதிக பரப்பில் கனிமங்கள் எடுத்து அதிக முறைகேடு செய்த குவாரிகள் முடக்கப்படும் நிலையிருக்கிறது. சில குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் நிலையிருக்கிறது. எனவே டிரோன் ஆய்வு கமிட்டி மூலமாக எவ்வளவு கோடி ரூபாய் அபராதம் விதிக்க போகிறார்கள், என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என குவாரி உரிமையாளர் கலக்கத்தில் உள்ளனர்.
கோவை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கூறுகையில் கோவை மாவட்டத்தில் அதிக ஆழத்திற்கு தோண்டிய கல்குவாரிகள் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் அங்கே மீண்டும் கல் எடுக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேலும் அதிக பரப்பு அனுமதி மீறி தோண்டப்பட்ட கல் குவாரிகள் மூடப்படும். எவ்வளவு கனிமம் தோண்டி எடுக்கப்பட்டதோ அதற்கு ஏற்ப அபராத தொகை விதிக்கப்படும். எத்தனை ஆண்டுகள் எவ்வளவு கனிமங்கள் என கணக்கீடு செய்து அவ்வளவுக்கு உண்டான அபராத தொகை பெறப்படும். கடந்த காலங்களில் எடுத்த கனிமங்களுக்கும் அபராத தொகை வசூலிக்கப்படும். இந்தத் தொகை செலுத்தாமல் யாரும் ஏமாற்ற முடியாது என்றார்.
