கோவையில் பத்திர எழுத்தர் அடித்து கொலை…!

கோவை சிங்காநல்லூர் தேவேந்திர குல வீதியை சேர்ந்தவர் வேலுசாமி (56), பத்திர எழுத்தர். இவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 17ம் தேதியில் இருந்து அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார் . பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அங்கே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், வேலுசாமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சிவக்குமார் (50) என்பவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இருவருக்கும் அடிக்கடி இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்தனர்.

சம்பவ தினத்தில் இதேபோல் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. வேலுசாமி வீட்டுக்கு வந்த சிவக்குமாருடன் மீண்டும் தகராறு எழுந்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், அங்கு கிடந்த கட்டையால் வேலுசாமியை சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் அவரது கை, கால்களும் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

இந்தமாதத்தில் மட்டும் கோவை நகரில் பீளமேட்டில் வாலிபர் நவீன், கிணத்துக்கடவில் வாலிபர் அஸ்வின், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி, கோவை தனியார் கல்லூரி மாணவர் அமுதன், தற்போது பத்திர எழுத்தர் வேலுசாமி என கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் கோவை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரு வாரங்களில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்டிருப்பது கோவை நகரை பரபரப்பு ஆக்கியுள்ளது.

One thought on “கோவையில் பத்திர எழுத்தர் அடித்து கொலை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *