கோவையில் நீட் தேர்வு: 4167 மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் நீட் முதுநிலை தேர்வு மையத்தில் மாணவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் தேசிய மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் நீட் முதுநிலை தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில் பீளமேடு, சரவணம்பட்டி, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மொத்தம் 18 மையங்களில் தேர்வு நடந்தது.

இந்த தேர்வு எழுத மாணவர்கள் காலை முதலே தேர்வு மையத்தில் குவிந்த நிலையில், காலை 7 மணி முதல் 8.30 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டது.

தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டனர். நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் கடுமையான சோதனைக்கு பிறகு மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில், மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்தனர். இதனால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் நீட் முதுநிலை தேர்வை 4,393 பேர் எழுதயிருந்த நிலையில், 4,167 பேர் தேர்வு எழுதினர். அதாவது, 94.86 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். 226 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

One thought on “கோவையில் நீட் தேர்வு: 4167 மாணவர்கள் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *