ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எச்சரிக்கை..
கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் 2.5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது.
இந்த பகுதி, கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. 5 மீட்டர் அகலத்தில் வாக்கிங் பகுதி உருவாக்கப்பட்டு ஸ்டைலான கிரானைட் கோட்டிங் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது.
தினமும் காலை, மாலை நேரங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை வாக்கிங் சென்று வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை மேலும் இரு மடங்கு அதிகமாகியுள்ளது. கூட்டம் அதிகரிப்பினால் வாக்கிங் தளத்தில் போலீஸ் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் இங்கே போலீசார் ரோந்து பணி நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வாக்கிங் பாதையில் சிலர் வாகனங்களை நிறுத்துவதாகவும், சிலர் வாகனத்தை பாதையில் வைத்து போட்டோ, வீடியோ எடுப்பதாலும் வாக்கிங் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிலர் வியாபார கடைகளை பொது இடம், ரோடு, வாக்கிங் பாதையில் வைத்துள்ளனர். இதனால் வாக்கிங் செல்வோருக்கு இடையூறு இருப்பதாக புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து இரவு போலீசார், மாநகராட்சி நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீர் சோதனை செய்தனர். இடையூறாக இருந்த சில கடைகள், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மைக்கில் கடை நிர்வாகத்தினர் தங்களது கடை எல்லைக்குள் தான் கடை நடத்த வேண்டும். பார்க்கிங் பகுதியை அபகரித்து கடையை நடத்த கூடாது என எச்சரித்தனர். பார்க்கிங் செய்ய விடாமல் கடை வைத்திருந்த டீக்கடை மற்றும் உணவு பொருட்கள் கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
