கோவை மாநகரில் மாணவர்கள் தங்கும் விடுதி, வீடுகளில் போலீஸ் சோதனை…!

கோவையில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் கொலை மற்றும் போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை புறநகரிலும் சோதனை நடத்தி வருகின்றனர். போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, குனியமுத்தூர், செல்வபுரம், பி.கே.புதூர், பாலு கார்டன், கரும்பு கடை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் அறைகள் போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தினர்.

ஆண்கள் தங்கும் விடுதிகள், கல்லூரிகளை ஒட்டிய லாட்ஜ்கள் ஆகியவற்றிலும் சோதளை நடத்தினர். மாணவர்கள் அல்லாமல் வெளிநபர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? போதைப்பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறிய இச்சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அதிகாலை முதல் மதியம் வரை இச்சோதனை நடந்தது.

இச்சோதனையின்போது, போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதிக சப்தம் எழுப்பும் வகையில் சைலன்சர் மாற்றி பொருத்தப்பட்ட 5 பைக்குகள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்ற சோதனை அடிக்கடி நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

போதை பொருட்கள், கஞ்சா தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தினரிடம் போலீசார் கூறியிருந்தனர். ஆனாலும், சில மாணவர்கள் வாட்ஸ்அப் குழு மூலமாக தப்பி விடுகிறார்கள் என்பதால் இச்சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், இது காலதாமதமான சோதனை, இந்த சோதனையால் போலீசாரால் எந்த போதை பொருட்களையும் மீட்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.

மேலும், சோதனையின்போது மாணவர்களை, மேலாடை இல்லாத நிலையில் போட்டோ எடுத்து, அதை சோசியல் மீடியாக்களில் போலீசார் பரவ விட்டுள்ளனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. போலீசாரின் இச்செயல், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2 thoughts on “கோவை மாநகரில் மாணவர்கள் தங்கும் விடுதி, வீடுகளில் போலீஸ் சோதனை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *