பச்சை கலருக்கு மாறிய உக்கடம் வாலாங்குளம்…
உக்கடம் வாலாங்குளத்தில் அதிக அளவு ஆகாயத்தாமரை நிரம்பி இருந்தது. இதனால் துர்நாற்றம் அதிகமாக காணப்பட்டது.
இதை தொடர்ந்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் குளத்தில் இருந்த ஆகாய தாமரைகளை கடந்த இரண்டு வாரங்களாக ஜேசிபி மூலமாக அகற்றினார். அகற்றப்பட்ட கழிவுகளை குளக்கரை ரோட்டில் குவித்து வைத்தனர். இந்த நிலையில் அந்த கழிவுகளில் அழுகிப்போய் தற்போது துர்நாற்றம் மேலும் அதிகமாகி விட்டது.
கழிவுகளிலிருந்து அசுத்த நீர் வடிந்து மறுபடியும் குளத்திற்குள் சென்று விட்டது. இதனால் குளக்கரையில் குடலை குமற்றும் வகையில் துர்நாற்றம் அதிகமாக இருக்கிறது. லங்கா கார்னர், அரசு மருத்துவமனை, ஸ்டேட் பேங்க் ரோடு, கூட் செட் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை நீர் அனைத்தும் வாலாங்குளம் பகுதியில் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக விடப்படுகிறது.
இதனால் துர்நாற்றத்தின் தன்மை அதிகமாகி விட்டது. குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் இருந்தும் அதை முறையாக செயல்படுத்தி மொத்த கழிவு நீரையும் சுத்திகரித்து குளத்துக்குள் விட நடவடிக்கை எடுக்கவில்லை.
மாநகராட்சி நிர்வாகத்தினர் சுத்திகரிப்பு நிலையத்தில் பெயரளவிற்கு கூட செயல்படுத்தாமல் காட்சி பொருளாக வைத்திருக்கிறது.
முழு அளவில் சாக்கடை நீரை நேரடியாக குளத்தில் கலக்க விட்டிருப்பதால் அசுத்த அளவு கூடுதலாகி வருகிறது. மேலும் ஆகாயத்தாமரைகள் அகற்றிய பின்னரும் குளத்தின் நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. குளத்தில் உள்ள மொத்த நீரையும் சுத்திகரித்து குளத்தில் விட வேண்டும். இல்லாவிட்டால் கழிவு நீரை வெளியேற்றிவிட்டு வரும் தண்ணீரை சுத்திகரித்து குளத்துக்குள் விட வேண்டும்.
ஏற்கனவே அசுத்தமாக இருக்கும் பச்சை நிற கழிவு நீரில் சுத்திகரித்த நீரை விட்டால் அதனால் எந்த பயனும் இருக்காது. மாநகராட்சி நிர்வாகத்தினர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
