சிறுவாணி, பில்லூர் திட்டத்திற்கு ரூ. 20 கோடி கொடுத்த கோவை மாநகராட்சி…!

கோவை மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

குடிநீர் எடுத்து உள்ளாட்சி குடிநீர் தொட்டிகளுக்கு வழங்கும் பணி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உரியது. அந்த குடிநீரை பகிர்மான குழாய் மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்க வேண்டிய பணியை உள்ளாட்சிகள் செய்து வருகிறது. கடந்த பல ஆண்டாக உள்ளாட்சி நிர்வாகங்கள், குடிநீர் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் வழங்கவேண்டிய தொகையை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது.

தற்போது கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், பவானி குடிநீர் திட்டங்கள் மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது ஆனால் இதற்கான நிதி இல்லாமல் குடிநீர் வாரியம் திணறி வருகிறது. சிறுவாணி அணை சீரமைக்க 64 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்து கிடப்பில் இருக்கிறது.

இந்த அணை கடந்த 1983ம் ஆண்டில் அணை கட்டப்பட்டது. அதற்கு பின் பக்க சுவர் பலமாக்கப்படவில்லை. பக்க சுவரில் நீர் கசிவு இருக்கிறது. புனே பகுதியிலிருந்து தொழில் நுட்ப குழு ஆய்வு செய்தது. இந்த பணிகளை செய்து முடிக்க 93 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு போடப்பட்டது. இதில் பல்வேறு ஆலோசனைக்கு பின்னர் 64 கோடி ரூபாய் செலவில் அணை பலமாக்கும் பணியை நடத்தலாம்.

3 வகையாக அதிக அழுத்தத்தில் சிமெண்ட், வேதிப்பொருட்கள் கலவையை சிறு துளை வழியாக அணையின் பக்க சுவரில் செலுத்த வேண்டும். இந்த பணியை சிறப்பாக செய்தால் அணை பலமாக இருக்கும் என கேரள நீர் பாசனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கு தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒப்பு கொண்டனர்.

மேலும் திட்ட மதிப்பீடு தொகை ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தொகை பெற திட்டமிடப்பட்டது. சிறுவாணி அணை கேரள அரசின் பராமரிப்பில் இருக்கிறது. நீர் உபயோக உரிமை தமிழகத்திற்கு இருக்கிறது. அணையின் மொத்த நீர் தேக்க கொள்ளளவு 650 மில்லியன் கன அடி நீர் தேக்க பரப்பு 22.47 சதுர கி.மீ

அணையின் நீளம் 203 மீட்டர், உயரம் 57 மீட்டர், மொத்த நீர் மட்ட உயரம் 878.50 மீட்டர் (கடல் மட்ட உயர கணக்கின் படி) இருக்கிறது. அணைக்கு செல்லும் வனப்பகுதி ரோடு சீரமைக்கப்படவில்லை. கோவை வழியாக சிறுவாணி அணைக்கு செல்லும் ரோடு சீரமைக்க தமிழக அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. அணையை தூர் வாரி சீரமைக்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்யவில்லை.

சிறுவாணி நீர் எடுப்பு நிலையம் (intake tower) கட்டி 45 ஆண்டு கடந்து விட்டது. இந்த டவர் வழியாக தான் சிறுவாணி அடிவாரத்திற்கு குகை (டணல்) வழியாக குடிநீர் பெறப்படுகிறது. நீர் எடுப்பு நிலையத்தின் விட்டம் 6 மீட்டர். உயரம் 29.5 மீட்டர் நீர் எடுக்கும் குழாயின் அளவு 900 மி.மீ, 4 குழாய் வழியாக குடிநீர் பெறப்பட்டு வருகிறது.

குகை பாதை 1.55 கி.மீ தூரத்திற்கு உயர்ந்த மலையின் இடையே உருவாக்கப்பட்டுள்ளது. நீர் எடுப்பு டவர். குகை பாதை சீரமைப்பு பணி நடத்த தனியாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு இனி பழைய நீர் எடுப்பு டவர் வேண்டாம், அதற்கு பதிலாக புதிதாக நீர் எடுப்பு டவர் கட்டலாம்.

இந்த டவர் ஹைட்ராலிக் முறையில் புதிய தொழில் நுட்பத்தில் ஆன்லைனில் இயக்கும் வகையில் மேற்கொள்ளவேண்டும். இப்போதுள்ள பழைய டவரில் ஆட்கள் இறங்கி வால்வு திறக்க வேண்டும். டவர் அபாய கரமாக இருப்பதால் உள்ளே இறங்குவதில் அச்சம் இருப்பதாக தெரிவித்தனர். எனவே நீர் எடுப்பு டவர் கட்ட தனி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படவுள்ளது.

அணையின் பக்க சுவர், ரோடு, நீர் தேங்கும் பகுதி சீரமைப்பு பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் அணை சீரமைப்பு பணி செய்ய வேண்டியுள்ளது. எனவே குடிநீர் கட்டண பாக்கியை தர வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேட்டனர்.

இதை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிறுவாணி அணைக்காக 11.22 கோடி ரூபாய் வழங்கினார். 8.78 கோடி ரூபாய் பில்லூர் அணை திட்டத்திற்கு குடிநீர் கட்டணமாக வழங்கப்பட்டது. இந்த தொகையில் விரைவில் சிறுவாணி அணையில் விரைவில் நீர் கசிவு தடுப்பு பணிகள் துவக்கப்படவுள்ளது. கேரள அரசு நீர் கசிவு தடுப்பு பணிக்கான திட்டங்களை தயார் செய்து வருகிறது. விரைவில் டெண்டர் விட்டு பணிகள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

4 thoughts on “சிறுவாணி, பில்லூர் திட்டத்திற்கு ரூ. 20 கோடி கொடுத்த கோவை மாநகராட்சி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *